Last Updated : 25 Feb, 2020 07:24 PM

 

Published : 25 Feb 2020 07:24 PM
Last Updated : 25 Feb 2020 07:24 PM

டெல்லியில் 3-வது நாளாக தொடரும் கலவரம்: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; 150 போலீஸார் காயம்

டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் தொர்ந்து 3-வது நாளாக நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 150 போலீஸார் வரை காயமடைந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இன்று காலையும் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.

இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள். போலீஸார் 48 பேர், பொதுமக்கள் 98 பேர் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸார் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக வடகிழக்கு டெல்லியில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று பிற்பகல் வரை 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி குருதேஜ்பகதூர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் குப்தா கூறுகையில், " கலவரத்தில் காயத்துடன் வந்து அனுமதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தனர்" எனத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்துவரும் கலவரத்தில் இதுவரை ஒரு தலைமைக் காவலர் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி மேக்ஸ் மருத்துவமனை விடுத்த அறிக்கையில், "மேக்ஸ் மருத்துவமனையில் படுகாயங்களுடன் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கலவரத்தில் காயம் ஏற்பட்டு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் மன்தீப் ராந்தவா நிருபர்களிடம் கூறுகையில், "வடகிழக்கு டெல்லியில் நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டபோதிலும் வடகிழக்கு மாவட்டத்தில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 11 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x