Last Updated : 25 Feb, 2020 01:56 PM

 

Published : 25 Feb 2020 01:56 PM
Last Updated : 25 Feb 2020 01:56 PM

டெல்லி கலவரம்: உணர்வற்றவர்களை ஆட்சியில் வைத்தமைக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்: ப.சிதம்பரம் கண்டனம்

குறுகிய நோக்கு உள்ளவர்களையும், உணர்வற்றவர்களையும் ஆட்சியில் அமரவைத்தமைக்கான விலையை மக்கள் கொடுக்கிறார்கள் என்று டெல்லி கலவரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு டெல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே தொடங்கிய கலவரம் இன்று மூன்றாவது நாளாக நீடித்தது.

இந்தக் கலவரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் கலவரத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். ட்விட்டரில் அவர் விடுத்த செய்தியில், "டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்தக் கலவரத்துக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

உணர்வற்றவர்களையும், குறுகிய நோக்கம் உள்ள தலைவர்களையும் ஆட்சியில் அமரவைத்தமைக்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் எந்தவிதமான திருத்தமும் இல்லாமல்தான் இந்தியா வாழ்ந்து வந்தது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் அவசியம் என்ன? அந்தத் திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

இப்போதுகூட ஒன்றும் தாமதம் ஏற்படவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் குரல்களைக் கேட்டறிந்து, சிஏஏ சட்டத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் சமூகத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தும் என்று எங்கள் கட்சி எச்சரித்தது. உடனடியாக அந்தச் சட்டத்தை ரத்து செய்யுங்கள். எங்கள் எச்சரிக்கைகள் செவித்திறன் அற்றவர்கள் காதில் விழுந்துள்ளது" எனக் கண்டித்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கூறுகையில், "டெல்லியில் நடந்துவரும் கலவரம் கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டிலிருந்து அதிபர் டெல்லி வந்துள்ளபோது, அங்கு வன்முறை ஏற்படுவது நாட்டுக்கே அவமானம்.

பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா நீங்கள் வைத்திருக்கும் போலீஸாரைப் பாருங்கள். போராட்டக்காரர்கள் மீது அவர்கள் கல்வீசுகிறார்கள். இந்தக் கலவரத்தைக் கண்டிக்கிறேன். கலவரத்தைக் கட்டுப்படுத்த அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x