Published : 25 Feb 2020 10:13 AM
Last Updated : 25 Feb 2020 10:13 AM

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல்

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், அதிமுக உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.25) அறிவித்தது.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6-ம் தேதி தொடங்கி, மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 16-ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 18.

மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு இருக்கும் பலத்தின் அடிப்படையிலேயே மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இருக்கும். அதன்படி, அதிமுகவில் 3 எம்பிக்களும், திமுகவில் 3 எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x