Published : 24 Feb 2020 02:34 PM
Last Updated : 24 Feb 2020 02:34 PM

இந்திய - அமெரிக்க உறவு நெருக்கமானது: பிரதமர் மோடி பெருமிதம்

அகமதாபாத்

இந்திய - அமெரிக்க உறவு நெருக்கமானது என பிரதமர் மோடி கூறினார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.

அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது ராட்டை குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். அங்கு ட்ரம்ப்பை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உங்களை மகிழ்ந்து வரவேற்கிறது. இது குஜராத்தாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறது. இன்று வரலாறு திரும்பி உள்ளது. 5 மாதங்களுக்கு முன் எனது அமெரிக்க பயணத்தின் போது, ஹவ்டி மோடி நிகழ்ச்சி மூலம் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று நண்பர் ட்ரம்ப்புக்காக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவர் தனது இந்திய பயணத்தை அகமதாபாத்தில் தொடங்கியுள்ளார். இந்திய அமெரிக்க உறவு என்பது வெறும் கூட்டிணைவு மட்டுமல்ல. அதையும் தாண்டிய நெருக்கமான உறவு.

உலகம் ஒரே குடும்பம் என்பது தான் இந்தியர்களின் நம்பிக்கை. இருநாடுகளில் ஒரு நாடு சுதந்திர தேவியின் சிலையின் மூலம் பெருமை கொள்கிறது. மற்றொரு நாடு ஒற்றுமையின் சிலையின் (வல்லபாய் படேல் சிலை) மூலம் பெருமை கொள்கிறது.’’ என பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x