Published : 24 Feb 2020 09:45 AM
Last Updated : 24 Feb 2020 09:45 AM

‘வளமான சமூக மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்திட்டிருக்கிறது’

புதுடெல்லி: வளமான சமூக மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்திட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.

'நீதித்துறையும் உலக மாற்றமும்' என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு பிறழாமல் இருப்பதற்கு நீதித்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியம். சட்டம் ஒழுங்கும், சட்ட அமலாக்கமும் முறையாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும். அந்த வகையில், இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தையும், நீதி பரிபாலனத்தையும் தமது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றம் பாதுகாத்து வருகிறது. இதன் காரணமாகவே, சாமானிய மனிதனுக்கும் இங்கு நீதி சாத்தியமாகியுள்ளது.

அதேபோல், நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு சம நீதி வழங்குவதையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து வந்திருக்கிறது. உதாரணமாக, பணியிடங்களில் நிகழும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்தது. தற்போது, ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது. இதுபோன்ற பல்வேறு வளமான சமூக மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்திட்டுள்ளது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x