

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். முதல்கட்டமாக குஜராத்தின் அகமதாபாத்துக்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று இந்தியா வருகிறார். முதல்கட்டமாக அவரும் அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக 22 கி.மீ.தொலைவுக்கு மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
‘நமஸ்தே ட்ரம்ப்’
பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அந்த மைதானத்தை அவர் திறந்து வைக்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
அகமதாபாத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு ட்ரம்பும் அவரது குடும்பத்தினரும் புறப்படுகின்றனர். மாலை 4.45 மணிக்கு ஆக்ரா செல்லும் அவர்கள் 5.15 மணிக்கு தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க உள்ளனர். ஆக்ராவில் இருந்து 6. 45 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்லும் ட்ரம்ப் அங்குள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இந்த ஓட்டல் தற்போது அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 10.30 மணிக்கு ட்ரம்பும் மெலானியாவும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், எரிசக்தி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்திக்க உள்ளனர்.
ட்ரம்பின் மனைவி மெலானியா டெல்லியில் உள்ள பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 3 மணிக்குடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ட்ரம்ப் செல்கிறார்.அங்கு இந்திய தொழிலதிபர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில்ட்ரம்புக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதன்பிறகு இரவு 10 மணிக்கு ட்ரம்ப் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு
அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிகளில் 400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.100 கோடி செலவிடப்படுவதாக குஜராத்அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 400 அமெரிக்க அதிகாரிகள் அகமதாபாத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துவருகின்றனர். அதிபர் ட்ரம்பின் 'பீஸ்ட்' கார், 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர் அகமதாபாத்தில் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க விமானப் படையின் 3 ஹெர்குலஸ் விமானங்களும் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
மோடி ட்விட்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "அமெரிக்க அதிபரை வரவேற்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. திங்கள்கிழமை அதிபர் ட்ரம்ப் நம்மோடு இருப்பார். இது நமக்கு மிகப்பெரிய கவுரவம். அகமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை அதிபர் ட்ரம்ப் தொடங்கிவைப்பார்" என்று தெரிவித்துள்ளார்.