Last Updated : 22 Feb, 2020 06:53 PM

 

Published : 22 Feb 2020 06:53 PM
Last Updated : 22 Feb 2020 06:53 PM

எந்த மனநலப் பாதிப்பும் இல்லை: நிர்பயா குற்றவாளி வினய் குமார் மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார், தனக்கு மனநிலை சரியில்லை என்றும் தலையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

திரிக்கப்பட்ட உண்மை மூட்டையாக வினய் குமாரின் கூற்று உள்ளது. அவருக்கு எந்தக் காயமும் மனநலப் பாதிப்பும் இல்லை என்று திஹார் சிறை நிர்வாகம் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய் குமார் சர்மா, அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி இருமுறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனு என தண்டனையைத் தள்ளிப்போட்டதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க அனுமதியளித்தது. இதையடுத்து, மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெத் வாரண்ட் பிறப்பித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் தனக்குத் தானே சிறையின் சுவரில் தலையை மோதி, காயம் ஏற்படுத்திக் கொண்டதாகச் சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சிறிய காயத்துக்கு தற்போது சிறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு மனநிலை சரியில்லை, தனது தாயைக் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு மன உளைச்சல் இருக்கிறது. ஆதலால், உளவியல் சிகிச்சை தேவை எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வினய் குமார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் திஹார் சிறை நிர்வாகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி தர்மேந்திர ராணா முன் இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது திஹார் சிறை நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், "குற்றவாளி வினய் குமார் தரப்பில் கூறப்படுவது அனைத்தும் திரிக்கப்பட்ட உண்மை மூட்டைகள். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், வினய் குமார் தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்குச் சிறிய அளவில் காயம் இருந்ததால் சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனநிலை பாதிப்பு ஏதும் இல்லை. அவரின் மருத்துவ ஆய்வில் 4 பேரும் முழுமையான மனநிலையில் இருக்கிறார்கள் என்று மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். மருத்துவரும் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார் அவரிடமே கேட்கலாம்" எனத் தெரிவித்தனர்.

சிறையின் மருத்துவர் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில், "குற்றவாளிகள் 4 பேரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வினய் குமார் அவரின் தாய், வழக்கறிஞருடன் பேசுகிறார். அவர் தனது தாயைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்பது தவறு" எனத் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு வினய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங், "வினய் குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டர் மட்டும் சுற்றியுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேந்திரா ராணா, வினய் குமார் சர்மாவின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x