Last Updated : 22 Feb, 2020 03:19 PM

 

Published : 22 Feb 2020 03:19 PM
Last Updated : 22 Feb 2020 03:19 PM

'கடைசியாக குடும்பத்தினரை சந்தித்துக் கொள்ளுங்கள்': நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு திஹார் நிர்வாகம் கடிதம்

நிர்பயா தூக்கு தண்டனை கைதிகள் : கோப்புப்படம்

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்துக் கொள்ளலாம் என திஹார் சிறை நிர்வாகத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திஹார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் உறவினர்களைச் சந்தித்துக் கொள்ளலாம் எனக் கூறி, திஹார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து திஹார் சிறை நிர்வாக அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், "நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் தேதி நெருங்கிவிட்டதால், அவர்கள் கடைசியாக தங்களின் உறவினர்களையும், குடும்பத்தினர்களையும் சந்தித்துக்கொள்ளலாம் எனக் கூறி சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முகேஷ், பவன் குப்தா இருவருக்கும் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 4 குற்றவாளிகளும் நாள்தோறும் குடும்பத்தினரைச் சந்திக்கிறார்கள் என்றாலும் கடைசி சந்திப்பு என்று இருக்கிறது. அதன்பின் அவர்கள் யாரும் குடும்பத்தினரைச் சந்திக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வினய் குமார் சர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தனக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மனநிலை சரியில்லாமல் இருப்பதால், உளவியல் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி வினய் குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணையும், டெல்லி திஹார் சிறை நிர்வாகத்தின் பதில் மனுவும் இன்று விசாரிக்கப்படுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x