Published : 22 Feb 2020 12:13 PM
Last Updated : 22 Feb 2020 12:13 PM

மெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி: கேஜ்ரிவால், சிசோடியா நீக்கம்?

டெல்லியில் மெலினா ட்ரம்ப் கலந்துகொள்ளும் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியலில் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர்.

அகமதாபாத்தில் வாகனத்தில் ட்ரம்பும், பிரதமர் மோடியும் பேரணியாக செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள 1.10 லட்சம் இருக்கைகள் கொண்ட மோதேரா மைதானத்தில் நடைபெறும் ‘‘நமஸ்தே ட்ரம்ப்’’ என்ற பெயரி்ல் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி டெல்லியில் அரசு பள்ளி ஒன்றை மெலினா ட்ரம்ப் பார்வையிடுகிறார். அப்போது அரசு பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மாநில துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் மெலினா ட்ரம்ப் பங்கேற்கும் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியலில் கேஜ்ரிாவால் மற்றும் மணிஷ் சிசோடியா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அரசு வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. இருப்பினும் மத்திய அரசு தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x