

சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கப்படச் செய்து, தங்களுடைய கருத்தை வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிப்பதும் தீவிரவாதம்தான் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மக்கள் சிஏஏவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். அதை மறைமுகமாகக் குறிப்பிட்டு கேரள ஆளுநர் முகமது கான் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லியில் பாரதிய சாத்ரா சான்சத் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
சாலையை மறித்து அமர்ந்து கொண்டு , மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்து, தங்கள் கருத்துக்களை வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிப்பதும் ஒருவகையான தீவிரவாதம்தான்.
ஆவேசம், ஆத்திரம் என்பது வன்முறையில் மூலம் மட்டும் வருவது அல்ல. அது பலவடிவங்களில் வரும். நீ்ங்கள் என்னைக் கவனிக்காவிட்டால், நான் இயல்பு வாழ்க்கையைக் குலைப்பேன்.
ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து, எதிர்ப்பு என்பது அவசியமானதுதான். அது இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்தையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உங்கள் கருத்துக்களை, சிந்தனைகளை மற்றவர்கள் மீது செலுத்தாதீர்கள்.
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த சர்ச்சையும் முதலில் 370 பிரிவு என்ன என்று முழுமையாகப் படிக்க வேண்டும். ஒரு வீடு காலியாகும்போது, யாரும் இல்லாத போது பல பேய்கள் வீட்டுக்குள் வரும்.
அப்படித்தான் பயங்கரவாதம் எனும் பேய் வந்துள்ளது. 370ம் பிரிவு ரத்து செய்யப்பட்டபின் காஷ்மீரில் இயல்புநிலை இப்போது திரும்பி இருக்கிறது
இவ்வாறு ஆளுநர் முகமது கான் தெரிவித்தார்