அறிவியல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கலாமின் பெயரில் தங்கக் கோப்பை

அறிவியல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கலாமின் பெயரில் தங்கக் கோப்பை
Updated on
1 min read

அறிவியல் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பெயரில், தங்கக் கோப்பை ஒன்றை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் ஒவ்வோர் ஆண்டும் 'ஸ்கூல் சாஸ்த்ரோல்சவம்' எனும் பெயரில் அறிவியல் போட்டி நடத்தப்படுகிறது. இது ஆசியாவிலேயே ப‌ள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் அறிவியல் போட்டிகளில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்காக 'ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கோல்ட் கப்' என்ற பெயரில் தங்கக் கோப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் பி.கே.அப்து ராப் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோப்பையை உருவாக்குவதற்காக மாநிலம் முழுக்க உள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து ஒரு ரூபாய் என வசூலித்து, மொத்தம் ரூ.44 லட்சம் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது.

கேரளாவின் சிறந்த சிற்பிகளுள் ஒருவரான கனாயி குன்ஹிராமன், இந்தக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in