Published : 21 Feb 2020 08:01 AM
Last Updated : 21 Feb 2020 08:01 AM

குஜராத்தில் அமெரிக்க அதிபரை வரவேற்க ஒரு லட்சம் பேர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திறந்துவைக்க உள்ளார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். படம்: பிடிஐ

அகமதாபாத்

குஜராத் வருகை தரும் அமெரிக்க அதிபரை ஒரு லட்சம் பேர் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் செய்கிறார். இதில் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு அவர் வருகிறார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். இங்கிருந்து இரு தலைவர்களும் முதலில் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். பிறகு மோட்டேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது இந்தியப் பயணம் குறித்து சில தினங்களுக்கு முன் கூறும்போது, குஜராத்தில் தன்னை 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்கவுள்ளதாக உற்சாகமாக கூறினார். அகமதாபாத் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் பேர் என்பதால் 70 லட்சம் பேர் எப்படி வரவேற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறும்போது, “அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 22 கி.மீ. சாலை வழிப் பயணத்தில் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக ஒரு லட்சம் பேர் வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x