Last Updated : 20 Feb, 2020 04:31 PM

 

Published : 20 Feb 2020 04:31 PM
Last Updated : 20 Feb 2020 04:31 PM

''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''- நிர்பயா வழக்கு குற்றவாளி சிறந்த சிகிச்சை கேட்டு நீதிமன்றத்தில் மனு

என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தூக்கு தண்டனைக் குற்றவாளி நல்ல மனநிலை, உடல்நிலையில் இருந்தால்தான் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடியும். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் நிறைவேற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் தூக்கு தண்டனையைத் தள்ளிப்போட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை ஏற்று திஹார் சிறை நிர்வாகம் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய் குமார் சர்மா, அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி இருமுறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனு என தண்டனையைத் தள்ளிப்போட்டதால் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க அனுமதியளித்தது. இதையடுத்து, மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெத் வாரண்ட் பிறப்பித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் தனக்குத் தானே சிறையின் சுவரில் தலையை மோதி, காயம் ஏற்படுத்திக் கொண்டதாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சிறிய காயத்துக்கு தற்போது சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குற்றவாளி வினய் குமார் தரப்பில் அவரின் வழக்கறிஞர் மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், "வினய் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார்.

கடந்த வாரம் வினய் குமாரைச் சந்திக்க அவரின் குடும்பத்தினர், பெற்றோர் வந்தனர். அப்போது, வினய் குமாரால் தனது தாயைக் கூட அடையாளம் காண முடியவில்லை. தீவிரமான மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். தலையிலும், வலது கையிலும் வினய் குமாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தூக்கம் குறைந்துவிட்டதால், மூத்த உளவியல் நிபுணரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும்" என வாதிட்டார்.

இந்த மனு கூடுதல் செஷென்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ராணா நாளைக்குள் சிறை நிர்வாகம் பதில் மனுத் தாக்கல் செய்யக்கோரி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x