Published : 20 Feb 2020 03:47 PM
Last Updated : 20 Feb 2020 03:47 PM

371-வது பிரிவு எந்த காலத்திலும் நீக்கப்படாது: அமித் ஷா உறுதி

வடகிழக்கு மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும் 371-வது பிரிவை எந்த காலத்திலும் நீக்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் உதயமான 34-வது ஆண்டு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டபோது 371-வது பிரிவும் நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வதந்தியை கிளப்பி விட்டன. அதில் துளியும் உண்மையில்லை.

அருணாச்சல பிரதேசம் மற்றும் மிஸோரம் மாநிலங்கள் பிறந்த தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு ஒரு உறுதி மொழியை அளிக்கிறோம். 371-வது பிரிவை எந்த காலத்திலும் நீக்க மாட்டோம். யாரும் அதுபோன்ற முடிவெடுக்க அனுமதிக்க மாட்டோம்.

வடகிழக்கு மாநிலங்களின் நலனில் பிரதமர் மோடி முழு அக்கறை கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள் புவியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மட்டுமே இந்தியாவுடன் இணைந்து இருந்தது. பிரதமர் பதவியை மோடி ஏற்ற பிறகே வடகிழக்கு மாநிலங்கள் இந்திய ஆன்மாவுடன் இணைந்துள்ளது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x