Last Updated : 20 Feb, 2020 03:45 PM

 

Published : 20 Feb 2020 03:45 PM
Last Updated : 20 Feb 2020 03:45 PM

3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு 'டெத் வாரண்ட்' நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்குக் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வழங்கிய டெத் வாரண்ட்டை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த அனில் சுரேந்திர சிங் யாதவ்(வயது22) கடந்த 2018-ம் ஆண்டு 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் சுரேந்திர சிங் யாதவை சூரத் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அனில் சுரேந்திர யாதவ் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கீழ் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், சுரேந்திர சிங் யாதவுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெத் வாரண்ட்டை சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி சுரேந்திர சிங் சார்பில் சிறப்பு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், " தனக்கு விதிக்கப்பட்ட டெத் வாரண்ட் முறையில்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த 60 நாட்களுக்குள் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்படக்கூடாது என்று இருக்கும் போது 33 நாட்களில் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. குஜராத் அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

அப்போது, தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில், " குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 60 நாட்கள் வரை டெத் வாரண்ட் பிறப்பிக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருக்கும் போது, 33 நாட்களிலேயே கீழ் நீதிமன்றம் குற்றவாளிக்கு டெத் வாரண்ட் எவ்வாறு பிறப்பிக்க முடியும்.

இந்த மனுவை ஏற்று, கீழ் நீதிமன்றம் குற்றவாளிக்குப் பிறப்பித்த டெத் வாரண்ட்டை நிறுத்தி வைக்கிறோம். இந்த விவகாரத்தில் எவ்வாறு டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து கீழ் நீதிமன்றம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

ஏற்கனவே அம்ரோஹா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கி இருந்தபோது எவ்வாறு இதேபோன்ற உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. 60 நாட்கள் முடியும் முன்பு எவ்வாறு டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.யாராவது எங்களுக்கு விளக்குங்கள். நீதிமன்ற நெறிமுறை இவ்வாறு செல்வதை அனுமதிக்கமுடியாது" எனத் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் எவ்வாறு மீறப்பட்டன என்பது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டறிந்து கூற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x