Published : 20 Feb 2020 12:53 PM
Last Updated : 20 Feb 2020 12:53 PM

மடாதிபதியாக இஸ்லாமியர் நியமனம்: கர்நாடக லிங்காயத் மடம் நடவடிக்கை

திவான் ஷெரீஃப்

பெங்களூரு

கர்நாடகாவில் லிங்காயத் மடத்தின் தலைவராக 33 வயதான இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் வடக்குப்பகுதியில் உள்ள கடாக் மாவட்டத்தில் அசுதி கிராமத்தில் முருக ராஜேந்திர கோரனேஸ்வர சாந்தி மடம் அமைந்துள்ளது. லிங்காயத் சம்பிரதாயத்தை பின்பற்றும் இந்த மட350 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த மடத்திற்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா தவிர நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இந்த மடத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் இந்த மடத்தின் மடாதிபதியாக 33 வயதான முஸ்லிம் திவான் ஷெரீஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திவான் ஷெரீஃப் கூறுகையில் ‘‘சிறுவயது முதலே பசவாவின் போதனைகளுக்கு ஈர்க்கப்பட்டேன். மெனசாகி கிராமத்தில் ஒரு மாவு ஆலை நடத்தி வந்தேன்.

என் ஓய்வு நேரத்தில், பசவண்ணா மற்றும் 12-ம் நூற்றாண்டின் பிற சிவனடியார்கள் குறித்த சொற்பொழிவுகளை கேட்டு எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு நானும் சொற்பொழிவுகளை ஆற்றினேன். முருக ராஜேந்திர சுவாமிஜி எனது சேவையை அங்கீகரித்து என்னை அழைத்துச் சென்றார். பசவண்ணாவின் பாதையில் தான் இனிமேல் பயணம் செய்வேன்.”என்றார்

பிப்ரவரி 26-ம் தேதி மடாதிபதி திவான் ஷெரீஃப் பதவியேற்கிறார். அவர் கர்நாடகாவில் 12-ம் நூற்றாண்டின் வாழ்ந்த சீர்திருத்தவாதியான பசவன்னாவின் போதனைகளால் சிறுவயதில் இருந்தே ஈர்க்கப்பட்டவர், பசவன்னாவின் சமூக நீதி மற்றும் நல்லிணக்க கொள்கைகளை பின்பற்றி வருபவர்.

ஷரீஃப்பின் தந்தை, மறைந்த ரஹ்மான் சாஹிப் முல்லாவும் இந்த மடத்தின் பக்தராக இருந்து வந்துள்ளார். அந்த மடத்தின் மடாதிபதியான சிவயோகியின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை, ரஹ்மான் சாஹிப் முல்லா தனது கிராமத்தில் மடம் அமைக்க இரண்டு ஏக்கர் நன்கொடை அளித்தார்.

தற்போதைய மடாதிபதி சிவயோகி

இதுகுறித்து மடத்தின் தற்போதைய மடாதிபதி சிவயோகி கூறுகையில் “ஷெரீஃப் மற்றும் அவரது தந்தையும் மடத்துடன் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்கள். லிங்க தீட்சை பெற்றவர்கள். ஷெரீஃப் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி லிங்க தீட்சை பெற்றார். பசவண்ணாவின் தத்துவங்கள் உலகளாவியவை, சாதி மற்றும் மத பேதங்களை கடந்தவை. அவர் சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்தைக் கனவு கண்டார், அவருடைய போதனைகளைப் பின்பற்றி, மடம் அனைவருக்கும் அருளுகிறது.’’ எனக் கூறினார்.

ஷெரீஃப்புக்கு திருமணமாகி மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களை மடாதிபதியாக நியமிக்கும் நடைமுறை லிங்காயத் மடங்களில் உள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x