Last Updated : 20 Feb, 2020 12:29 PM

 

Published : 20 Feb 2020 12:29 PM
Last Updated : 20 Feb 2020 12:29 PM

வேறு வழியில்லை: நாக்பூர் நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆஜர்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் : கோப்புப்படம்

நாக்பூர்

2014-ம் ஆண்டு தேர்தலின்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தபோது 2 கிரிமினல் வழக்குகளை மறைத்தது தொடர்பான வழக்கில், நாக்பூர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம ஜாமீன் வழங்கியது.

ஏற்கெனவே 4 முறை ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்திருந்த நிலையில், இந்த முறை கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் பட்னாவிஸ் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஸ் உகே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் தேர்தலில் பிரமாணப் பத்திரத்தில் பட்னாவிஸ் தன் மீது இருக்கும் இரு கிரிமினல் வழக்குகள் குறித்துக் குறிப்பிடவில்லை. கடந்த 1996, 1998-ம் ஆண்டு பட்னாவிஸுக்கு எதிராக மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆனால், இந்த வழக்கில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இரு வழக்குகள் குறித்தும் பட்னாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் பட்னாவிஸுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பட்னாவிஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பட்னாவிஸ் மீதான விசாரணையைத் தொடரத் தடையில்லை என 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பட்னாவிஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த சூழலில் நாக்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி பி.எஸ்.இங்கில், தேவேந்திர பட்னாவிஸுக்கு கடைசி வாய்ப்பாக இந்த முறை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்ற எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் வேறுவழியின்றி நாக்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை தேவேந்திர பட்னாவிஸ் நேரில் ஆஜரானார், அவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான சொந்த ஜாமீனை நீதிபதி வழங்கினார். இந்தவழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x