Published : 20 Feb 2020 11:35 AM
Last Updated : 20 Feb 2020 11:35 AM

70 லட்சம் அல்ல; ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது 1 லட்சம் பேர் தான்

அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் 70 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவலை அம்மாநில அரசு மறுத்துள்ளது. ஒரு லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ட்ரம்ப் வருகையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, "நமது மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை வழங்கும். இந்த விஜயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் பலப்படுத்த இது நீண்ட தூரம் செல்லும்'' என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்தியப் பயணம் குறித்து நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்'' என்று தெரிவித்தார்.

இதற்காக அகமதாபாத் நகரில் அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை மீண்டும் உருவாக்குவது முதல் அனைத்து அழகுபடுத்தும் பணிகளிலும் அகமதாபாத் மாநகராட்சி இறங்கியுள்ளது.

ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் 70 லட்சம் பேர் வரை பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.

இதுகுறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹரா கூறுகையில் ‘‘அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் பேர் வரையில் பங்கேற்பார்கள். 70 லட்சம் பேர் பங்கேற்பதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை’’ எனக்க கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x