Published : 19 Feb 2020 08:03 PM
Last Updated : 19 Feb 2020 08:03 PM

‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ - சிஏஏ போராட்ட துப்பாக்கிச் சூடு பற்றி யோகியின் பேச்சால்  சர்ச்சை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பரில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடந்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகினர். இது தொடர்பாக இன்று உ.பி.சட்டமன்றத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் பலியாகவில்லை, கலவரக்காரர்களின் தோட்டாக்களுக்குத்தான் இவர்கள் பலியாகினர். கலவரக்காரர்கள் சுட்டதில் கலவரக்காரர்கள் பலியாகினர். யாரோ ஒருவர் சுட வேண்டும் என்ற எண்ணத்துடன் தெருக்களில் இறங்கும்போது ஒன்று அவர் பலியாவார் அல்லது போலீஸ் பலியாவார்.

சுதந்திரம் என்ற கோஷங்கள் எழுப்பப் படுகின்றன, என்ன சுதந்திரம்? ஜின்னாவின் கனவை நோக்கி நாம் பணியாற்ற வேண்டுமா அல்லது காந்தியின் கனவை நோக்கி பணியாற்ற வேண்டுமா? டிசம்பர் வன்முறையில் போலீஸார் செயல்பாடுகளை நாம் பாராட்ட வேண்டும். மாநிலத்தில் கலவரம் எதுவும் இல்லை.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஆதரிக்கிறேன், ஆனால் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுப்போம்” என்றார்.

திங்களன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் 22 பேர் பலியானதாகவும் 883 பேர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது என்றும் இதில் 561 பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்றும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டினால் யாரும் பலியாகவில்லை என்றும் சாவும் நோக்கத்துடன் வருபவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? என்றும் யோகி சட்டப்பேரவையில் பேசியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x