Published : 19 Feb 2020 05:24 PM
Last Updated : 19 Feb 2020 05:24 PM
டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற பின், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அமித் ஷாவின் இல்லத்தில் சந்தித்த கேஜ்ரிவால் அவருடன் 20 நிமிடங்கள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார்.
டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி அமோகமாக 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வென்றது.
டெல்லியில் காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அடிக்கடி மத்திய அரசுடன் கடந்த காலத்தில் மோத வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின், கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறுகையில், " மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தேன். அவருடனான என்னுடைய சந்திப்பு மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்தது. டெல்லி குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். டெல்லியின் வளர்ச்சி குறித்து இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தனது பதவியேற்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவரால் வர இயலவில்லை. இருப்பினும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறுகையில், "உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. நீங்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவீர்கள் என்று நினைத்தேன். ஆனால், உங்களின் வேலைப்பளுவால் வர முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அனைத்து இந்தியர்களும் டெல்லி நகரைப் பார்த்து பெருமைகொள்ளும் வகையில் நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT