Published : 18 Feb 2020 08:29 PM
Last Updated : 18 Feb 2020 08:29 PM

மும்பை தாக்குதல்; குற்றவாளி கசாபை இந்துவாக காட்ட நடந்த சதி: காவல் ஆணையர் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக மும்பை நகருக்குள் கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்தனர். ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு 150க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்தனர்.

இதில் 9 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டார். பின்னர் அவர் வழக்கு விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் என்று உறுதி செய்யப்பட்டது. நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை மும்பை முன்னாள் காவல்த்துறை ஆணையர் ராகேஷ் மரியா விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் 'லெட் மீ சே இட் நவ்' என்ற பெயரில் ராகேஷ் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்துவாக சித்தரித்து இந்து தீவிரவாதம் என பிரச்சாரம் செய்ய பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதி செய்ததை அவர் தனது புத்தகத்தி்ல் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

மும்பை தாக்குதலை நடத்தியது பெங்களூரு நகரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற ஓர் இந்து திசை திருப்ப இந்த வழக்கின் குற்றச்சாட்டுக்கு ஆளான லஷ்கர் இ தோய்பா தீவிரவாத இயக்கம் முயற்சி செய்தது. இதற்கு ஏதுவாக சிறையில் இருந்த கசாப்பை அங்கேயே கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது.

பாகிஸ்தான் உள்வு அமைப்பான ஐஎஸ்ஐ இதற்கான திட்டத்தை தீட்டியது. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவ குற்றவாளியும், பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பவருமான தாவூத் இப்ராஹிமுக்கு இந்த பணிய ஒதுக்கியது.

இதனை செயல்படுத்த அந்த தீவிரவாத அமைப்பு, இந்திய முகவரிகளுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளை உருவாக்கியது. ஒரு புகைப்படத்தில், கசாப்பின் வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதன் மூலம் குற்றவாளியை இந்துவாக காட்ட முயற்சி நடந்தது. இதன் மூலம் இந்து தீவிரவாதம் என்று பிரச்சாரம் செய்யவும் ஐஎஸ்ஐ முயற்சி மேற்கொண்டது.

இதன்படி நடந்திருந்தால் அஜ்மல் கசாப் உயிரிழந்து இருக்க கூடும். இந்த தாக்குதலை நடத்தியது இந்து தீவிரவாதிகள் செய்ததாக தகவல் பரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x