Published : 18 Feb 2020 04:01 PM
Last Updated : 18 Feb 2020 04:01 PM

ட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்; நகரம் முழுவதும் பேனர்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில் பெரிய அளவில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி மாதம் 24, 25-ம் தேதிகளில் இந்தியா வர இருக்கிறார். குஜராத் மற்றும் டெல்லிக்கு ட்ரம்ப் வருகை தருகிறார்.

அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இப்பயணத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது இந்தியப் பயணம் குறித்து அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “நான் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.

விமான நிலையம் முதல் மோடேரா மைதானம் வரை 5 முதல் 7 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மோடி சிறந்த மனிதர். எனது சிறந்த நண்பர். இந்த ஆண்டின் முதல் இந்திய சுற்றுப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத் நகரம் தயாராகி வருகிறது. நகரம் முழுவதும் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் சுவர் எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளன.

இதுபோலவே நிகழ்ச்சி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானத்திலும் ட்ரம்பை வரவேற்பு சுவர் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x