Published : 18 Feb 2020 03:16 PM
Last Updated : 18 Feb 2020 03:16 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

2007-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி பெறுவதற்குச் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது. அதன்பின் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது சிதம்பரம் தரப்பினர் கேட்டபடி குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு சிபிஐக்கு நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x