Last Updated : 18 Feb, 2020 03:14 PM

 

Published : 18 Feb 2020 03:14 PM
Last Updated : 18 Feb 2020 03:14 PM

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் தேசத் துரோக வழக்கில் கைது: நீதிமன்ற வளாக‌த்தில் இந்துத்துவ அமைப்பினர் தாக்கியதால் பரபரப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கர்நாடகாவில் தேசத் துரோக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்று போலீஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, இந்துத்துவ அமைப்பினர் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் ஆகிய 3 காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகின்றனர். புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த 14-ம் தேதி விடுதியில் இந்த 3 மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் சனிக்கிழமை கல்லூரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 3 காஷ்மீர் மாணவர்களையும் உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்கி, தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

இதேபோல ஞாயிற்றுக்கிழமை ஹூப்ளி கோகுல் சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதனிடையே ஏபிவிபி அமைப்பினரும் 3 காஷ்மீர் மாணவர்களையும் தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என ஹூப்ளி மாநகர காவல் ஆணையர் திலீப்பிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரியின் முதல்வர் பசவராஜும் 3 மாணவர்களுக்கு எதிராகப் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் கோகுல் சாலை போலீஸார் 3 காஷ்மீர் மாணவர்களையும் தேசத் துரோக வழக்கில் கைது செய்தனர். இதனிடையே காவல் ஆணையர் திலீப், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவைப் பார்த்து, அதில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறினார். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 169-வது பிரிவின் கீழ் மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தைப் பெற்று, அவர்களை விடுவித்தார்.

இதனைக் கண்டித்து இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸாா் மீண்டும் 3 மாணவர்களையும் கைது செய்தனர். இன்று காலையில் மாணவர்களை ஹூப்ளி மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, 10க்கும் மேற்பட்ட இந்துத்துவ அமைப்பினர் மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பின்னர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் போலீஸார் 3 மாணவர்களையும் நீதிபதி புஷ்பா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது ஆஜரான ஹூப்ளி பார் கவுன்சில் உறுப்பினர் அசோக் அவேகர், ''நாட்டுக்கு எதிராக முழக்கமிட்டு தேசத் துரோக வழக்கில் கைதான காஷ்மீர் மாணவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜாராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே ஹூப்ளி வழக்கறிஞர்கள் யாரும் இவ்வழக்கில் ஆஜராக மாட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி புஷ்பா 3 காஷ்மீர் மாணவர்களையும் மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் பள்ளியில் நாடகம் நடித்ததற்காக பள்ளி மாணவர்கள் தேசத் துரோக வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மாணவர்கள் மீதும் தேசத் துரோக வழக்கு போடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x