Last Updated : 17 Feb, 2020 05:46 PM

 

Published : 17 Feb 2020 05:46 PM
Last Updated : 17 Feb 2020 05:46 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3-வது முறையாக 'டெத் வாரண்ட்': டெல்லி நீதிமன்றம் புதிய தேதி அறிவிப்பு

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் டெத் வாரண்ட்டும், அதன்பின் பிப்ரவரி 1-ம் தேதி 2-வது டெத் வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தங்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையைத் தள்ளிப்போட்டனர். இறுதியாக ஜனவரி 31-ம் தேதி, விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு, டெல்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் புதிதாகத் தேதிகளை அறிவிக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து திஹார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கக் கோரியிருந்தனர்.

இந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ராணா, "குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்'' என்று டெத் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் தன்சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் விரிந்தா குரோவரை மாற்றக் கோரியிருந்தார். இதையடுத்து, விரிந்தா குரோவருக்குப் பதிலாக வழக்கறிஞர் ரவி குவாசியை நீதிமன்றம் நியமித்தது.

குற்றவாளிகளில் 4 பேரில் பவன் குப்தாவுக்கு மட்டும்தான் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்யும் வாய்ப்பும், சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.பவன் குப்தா விரைவில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார் என அவரின் வழக்கறிஞர் ரவி குவாசி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x