ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ரூ.2,500 கோடியை இன்றே செலுத்துகிறோம்; நடவடிக்கை எடுக்காதீர்கள்: வோடஃபோன் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ரூ.2,500 கோடியை இன்றே செலுத்துகிறோம், வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடி செலுத்துகிறோம். எந்தவிதமான கடினமான நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என்று வோடஃபோன் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து வோடஃபோன் -ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தனியே மனுத்தாக்கல் செய்தன. அம்மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 23 அன்று நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் கால அவகாசம் கேட்டன.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டது. இவ்வழக்கு மார்ச் 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நிலுவையைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இதை ஏற்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தனக்கு இருக்கும் நிலுவைக் கட்டணத்தில் ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்திவிட்டதாக இன்று அறிவித்தது. வோடோஃபோன் நிறுவனம் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.53 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் வோடஃபோன் நிறுவனம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வோடஃபோன் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினார்.

வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேசுகையில், "ஏஜிஆர் நிலுவைத் தொகையில் ரூ.2500 கோடியை இன்று வோடஃபோன் நிறுவனம் செலுத்தத் தயாராக இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடியைச் செலுத்தவும் தயாராக இருக்கிறது. ஆனால், நிறுவனத்துக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்" எனக் கோரிக்கை வைத்தார்.

ஆனால், வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் கோரிக்கையை ஏற்க நீதிபதி அருண் மிஸ்ரா மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in