Published : 16 Feb 2020 06:40 PM
Last Updated : 16 Feb 2020 06:40 PM

அமித் ஷா வீடு நோக்கி பேரணி புறப்பட்ட ஷாகின் பாக் போராட்டக்குழு: போலீஸார் சமரசத்தையடுத்து திரும்பினர்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். அமித் ஷாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக போலீஸார் தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்ட பகுதிக்கே திரும்பினர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் குழுவினர் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டனர்.

இருப்பினும் போராட்டக்குழுவில் ஒரு தரப்பினர் இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் அமித் ஷாவை சந்தித்து பேசக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் ஷாகின்பாக் போராட்டக்குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு நோக்கி இன்று பிற்பகலில் பேரணியை தொடங்கினர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் அமித் ஷா வீடு வரை அவர்களை செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. பிரதிநிதிகள் மட்டுமே அமித் ஷாவை சந்திக்க அனுமதிக்கப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அனைவரும் சென்று சந்திக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அமித் ஷாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக போலீஸார் தெரிவித்தனர். 3 நாட்களுக்கும் அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஷாகின் பாக் பகுதிக்கு திரும்பினர். அதேசமயம் தொடர்ந்து போராட்டத்தை தொடருவது என்றும் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x