Last Updated : 16 Feb, 2020 03:55 PM

 

Published : 16 Feb 2020 03:55 PM
Last Updated : 16 Feb 2020 03:55 PM

மக்களுக்கு இலவச சேவைகள் வழங்குவது தொடரும்; பிரதமர் மோடியின் ஆசி தேவை: அரவிந்த் கேஜ்ரிவால் பேச்சு

டெல்லியில் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லி மக்களுக்கு இலவசமா வழங்கும் சேவைகள் தொடரும், அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சிறந்த நிர்வாகத்தை வழங்க மத்திய அரசுடன் இணக்காக இருக்க விரும்புகிறேன் என்று டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவிஏற்ற அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்

பிரதமர் மோடி இந்த விழாவுக்கு வரமுடியாவிட்டாலும் அவரின் ஆசியை நான் எதிர்பார்க்கிறேன் என்று கேஜ்ரிவால் பேசி வியப்பில் ஆழ்த்தினார்

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இதையடுத்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இன்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டும் எனும் கனவு இருக்கிறது. லண்டன், டோக்கியோ, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் பரவ வேண்டும். டெல்லியில் தொடங்கியுள்ள புதிய அரசியல் மூலம் இது சாத்தியம் என நம்புகிறேன்

நான் மக்களுக்கு இலவச சேவைகள் வழங்குவதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். கடவுள் மதிப்புமிக்க பொருட்களையும், வளங்களையும் இலவசமாக வழங்குகிறார், அதை நானும் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறேன். குழந்தைகள் கல்வி கற்பதற்கும், மக்களின் நோயைத் தீர்க்க தரமான மருத்துவச் சேவைகள் வழங்குவதற்கும் நான் மக்களிடம் பணம் வாங்க வேண்டுமா. நான் டெல்லி மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறுத்தமாட்டேன்.

ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பு, உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். மூவர்ணக்கொடிதான் உச்சத்தில் பெருமையுடன் பறக்க வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டுச் சிறந்த நிர்வாகத்தை வழங்க விரும்புகிறேன். தேர்தலில் என்னை ஆதரித்தவர்கள், ஆதரிக்காதவர்கள் என எந்தவித வேறுபாட்டையும் பார்க்காமல் அடுத்த 5ஆண்டுகளுக்கு அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன்.

நான் ஒவ்வொரு மக்களின் முதல்வர், மக்கள் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களித்தவர்களுக்கும் நான்தான் முதல்வர்கள், என்னுடைய வெற்றி டெல்லி மக்களின் ஒவ்வொருவரின் வெற்றி.

டெல்லியில் பதவி ஏற்புவிழாவைக் காண வந்திருந்த மக்கள் கூட்டம் : படம் ஏஎன்ஐ

டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், சாதி, மதம் சேர்ந்தவர்கள் என்பதை எனக்குக் கவலையில்லை. ஏழை, பணக்காரர் என்பதும் எனக்கு எனக்கு முக்கியமில்லை.

தேர்தல் நேரத்தில் நடந்தவற்றை அனைத்துக் கட்சிகளும் மறந்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.

நான் பிரதமர் மோடியை இந்த பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருந்தேன். ஆனால், அவர் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இருப்பினும், நான் பிரதமர் மோடியிடம் இருந்து அவரின் ஆசியை எதிர்பார்க்கிறேன். டெல்லியின் வளர்ச்சிக்குப் பிரதமர் மோடி உதவ வேண்டும்.

டெல்லியின் வளர்ச்சிக்கு அரசியல் தலைவர்கள் காரணமல்ல, சாமானிய மக்கள்தான் காரணம். ஆசிரியர்கள், மருத்துவர்கள், ரிக்சா ஓட்டுநர்கள், மாணவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட மக்கள்தான் டெல்லியை நடத்துகிறார்கள் இந்த மக்கள்தான் டெல்லிக்கு வாழ்வு அளிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அல்ல.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x