Published : 16 Feb 2020 09:59 AM
Last Updated : 16 Feb 2020 09:59 AM

ட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக ரூ.100 கோடி செலவிடும் அரசு: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 3 மணி நேர வருகைக்காக குஜராத் அரசு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு வருகிறது. 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசும் ட்ரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் விளையாட்டரங்கை திறந்து வைக்கிறார். அவருடன் அவரது மனைவி மெலானியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் அகமதாபாத் செல்கின்றனர். ட்ரம்ப் சுமார் 3 மணி நேரம் அகமதாபாத் நகரில் இருப்பார் எனத் தெரிகிறது.

இதையொட்டி 25 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர, அமெரிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் நம் நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையினர், சிறப்பு பாதுகாப்புப் படையினரும் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

ட்ரம்பின் வருகையையொட்டி அகமதாபாத் நகரை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என முதல்வர் விஜய் ருபானி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாலைகளை சீரமைப்பது, சாலையில் நடுவே அழகிய செடிகளை நடுவது உட்பட் நகரை அழகுபடுத்தும் பணிகளை அகமதாபாத் மாநகராட்சியும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் இணைந்து செய்து வருகின்றன. இதற்கான செலவு ரூ.100 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது. இந்த செலவின் பெரும்பகுதியை மாநில அரசும் சிறு பகுதியை மத்திய அரசும் ஏற்றுக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x