கண்டுகொள்ளாத ஆந்திர அரசு: 1500 பழங்குடியினர் அமைத்த 7 கி.மீ சாலை

விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பழங்குடிகள்.
விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பழங்குடிகள்.
Updated on
1 min read

அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால், தங்களது பழங்குடி கிராமத்தில், சுமார் 1500 பேர் ஒன்றுகூடி 7 கி.மீ சாலையை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களது கிராமங்கள் பலவற்றுக்கு இன்றைய நாள் வரை அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் இல்லை. மேலும் பல கிராமங்களுக்கு பஸ், ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதிகளும் கிடையாது. ஆனால், இவர்கள் பல ஆண்டுகளாக ஒவ்வொரு அரசையும் நம்பி அவர்களுக்கு வாக்களித்து, தங்களுக்கு விடிவு காலம் வராதா என நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உயிர் இழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள 9 கிராம பழங்குடியினர் ஒன்று கூடி தாங்களே சாலை அமைத்து கொள்வது என தீர்மானித்தனர். சுமார் 250 குடும்பத்தினர் இதில் ஈடுபட்டனர். 1500 பேர் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி இப்பணியை தொடங்கினர். இது வரை 7 கி.மீ சாலை போடப்பட்டு விட்டது. இதன் மூலம் 3 கிராமத்தில் போக்குவரத்து வசதி தொடங்கிவிட்டது. மீதமுள்ள 8 கி.மீ தூரமும் மண் சாலை அமைக்கும் பணி இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளும் இன்னமும் ஒரு மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் என கூறப்படுகிறது.

இதனால், தற்போது இந்த 9 கிராமங்களில் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது அரசு இதனை கண்டுகொண்டு, அந்த சாலையை தார் சாலையாக மாற்றி, அதில் மின் வசதி ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட 9 கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தினால் சுற்றுப்புற கிராமங்களும் பயனடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in