Last Updated : 15 Feb, 2020 09:00 PM

 

Published : 15 Feb 2020 09:00 PM
Last Updated : 15 Feb 2020 09:00 PM

சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சிக்கு எதிராக மும்பையில் மிகப்பெரிய போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு

மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் : படம் ஏஎன்ஐ

மும்பை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் உருது கவிஞர் பயஸ் அகமது பயஸின் கவிதையை மக்கள் பாடி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. . இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மும்பையில் நடந்த போராட்டத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

இந்நிலையில், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் சிஏஏ-திருத்தச்சட்டத்துக்கு எதிராக இன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. மகா மோர்ச்சா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை மகாராஷ்டிரா சேப்டர் ஆப் தி நேஷனல் அலைஸன்ஸ் எனும் அமைப்பு போராட்டத்தை நடத்தியது.

மும்பையின் பல்வேறு பகுதிகள், புறநகரான நவி மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
கைகளில் மூவர்ணக் கொடி ஏந்தியும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள். அங்கு வந்திருந்த மக்கள் மோடி அமித்ஷா விடம் இருந்து விடுதலை வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தில் என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என்பிஆர் நடைமுறையின்போது எந்தவிதமான ஆவணங்களும் காண்பிக்க மாட்டோம் என்று மக்கள் தெரிவித்தார்கள். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமைத்திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத், நடிகர் சுஷாந்த் சிங், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபி அசிம் ஆஸ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x