ஆதாருடன் பான் எண்ணை 2020, மார்ச் 31-க்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும்: வருமான வரித்துறை 

ஆதாருடன் பான் எண்ணை 2020, மார்ச் 31-க்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும்: வருமான வரித்துறை 
Updated on
1 min read

நிரந்தரக் கணக்கு எண் என்ற பான் எண்ணை வரும் மார்ச் 31, 2020-க்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது, இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஜனவரி 27, 2020 வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னமும் 17.58 கோடி பான் எண்கள் 12 இலக்க பயோமெட்ரிக் அடையாளத்துடன் இணைக்கப்படவில்லை.

இந்நிலையில் பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கவில்லை எனில் பான் எண் செயலிழந்து விடும் இதனால் வருமான வரித்துறைச் சட்டத்தின் கீழ் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பாக நேரிடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ஆனாலும் மார்ச் 31, 2020-க்குப் பிறகு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பவர்களின் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அந்த நாளிலிருந்து மீண்டும் செல்லுபடியாகும். ஜூலை 1, 2017 வரை பான் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண் பெற தகுதியுடையவர்கள், தங்கள் ஆதார் எண்ணை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in