Published : 15 Feb 2020 08:54 AM
Last Updated : 15 Feb 2020 08:54 AM

நிர்பயா வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த நீதிபதி

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட இரண்டு முறை வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகள் தங்களின் சட்ட வாய்ப்புகளை பயன்படுத்திய காரணத்தால் குறிப்பிட்ட தேதிகளில் அவர்களை தூக்கிலிட முடியவில்லை.

இதனிடையே, அவர்களின் மரண தண்டனையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அண்மையில் ஒத்தி வைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு, டெல்லி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவாளிகளை ஒரே நேரத்தில் தூக்கிலிட அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த மனுவானது நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பையும் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அங்கிருந்த போலீஸாரும், வழக்கறிஞர்களும் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு சுயநினைவு திரும்பியது.

எனினும், அவர் மிக சோர்வாக காணப்பட்டதால் அவரை காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுவதாக சக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தமது கருணை மனு நிராகரிப்பட்டதற்கு எதிராக நிர்பயா குற்றவாளிகளில் ஒருவர் வினய் சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முன்னதாக, இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x