Published : 14 Feb 2020 04:28 PM
Last Updated : 14 Feb 2020 04:28 PM
நிர்பயா வழக்கு விசாரணையின்போது நீதிபதி பானுமதி உடல்நலக்குறைவால் திடீரென மயங்கியதால் உத்தரவு பிறப்பிப்பது ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தும், சீராய்வு மனுத் தாக்கல் செய்தும் தண்டனையைத் தள்ளிப்போடக் காரணமாக இருந்தனர். இதனால் தூக்கு தண்டனையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீர்ப்பை நீதிபதி பானுமதி உத்தரவு பிறப்பிக்க தயாராகி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் நீதிபதி பானுமதிக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர், அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து, வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT