Published : 14 Feb 2020 09:45 AM
Last Updated : 14 Feb 2020 09:45 AM

‘கோவிட்-19' காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

‘கோவிட்-19 ' காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

புதுடெல்லி

‘கோவிட்-19 ' காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் ஏற்படும் ‘கோவிட்-19 ' காய்ச்சல் சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சீனா மட்டுமின்றி சுமார் 28 நாடுகளில் ‘கோவிட்-19 ' காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 3 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் 3 பேரும் திருச்சூர், ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆலப்புழாவில் சிகிச்சை பெற்ற மாணவிக்கு காய்ச்சல் குணமானது. அவர் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். எனினும் 14 நாட்கள் அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த 2 பேருக்கு காய்ச்சல் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேற்குவங்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த அனிதா என்பவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. ‘கோவிட்-19 ' காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த புதன்கிழமை பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த ஹிமாத்ரி பர்மான், நாகேந்திர சிங் ஆகியோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே என்ன வகையான காய்ச்சல் என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

‘கோவிட்-19 ' காய்ச்சல் பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:

‘கோவிட்-19 ' காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. விமான நிலையங்களில் அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து மீட்கப்பட்ட 402 பேர் டெல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் ‘கோவிட்-19 ' காய்ச்சல் இல்லை.

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க முடியாது. கப்பல் பயணிகள், ஊழியர்களில் ‘கோவிட்-19 ' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை ஜப்பானிய அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்து வருகின்றனர். மற்றவர்கள் வரும் 19-ம் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இப்போதைய நிலையில் ஜப்பானிய அரசு விதிகளின்படியே செயல்பட முடியும். எனினும் ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கப்பல் குழுவினர், பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x