மத்திய வெளியுறவுத் துறையின் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பெயர்: மத்திய அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : கோப்புப்படம்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய வெளியுறவுத் துறையின் கீழ் வரும் இரு முக்கியமான நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜின் 68-வது பிறந்த நாள் நாளை (வெள்ளிக்கிழமை) வருவதையடுத்து, மத்திய அரசு அவரின் பெயரை சூட்டியுள்ளது.

இதன்படி டெல்லியில் உள்ள தி பிரவாசி பாரதிய கேந்திரா எனும் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனம் இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் பவன் என்று அழைக்கப்படும். அதேபோல, வெளியுறவுச் சேவை நிறுவனம் (தி ஃபாரின் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்) இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் சர்வீஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான அரசு முதல் முறையாக அமைந்தபோது, அதில் வெளியுறவுத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். உலகில் எந்த இடத்தில் இந்தியர்களுக்கு எந்தவிதமான துன்பும் நேர்ந்தாலும், அல்லது ட்விட்டரில் உதவி கோரினாலும் தயங்காமல், அதைத் தொடர்ந்து கண்காணித்து உதவிகளைச் செய்யக்கூடியவராக சுஷ்மா திகழ்ந்தார்.

சுஷ்மா ஸ்வராஜின் கருணை உள்ளம், உதவி செய்யும் பாங்கு, இந்தியர்களிடத்தில் அன்பு காட்டுதல் போன்றவை அவருக்குக் கட்சிகளைக் கடந்து நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், " மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மதிப்பிட முடியாத சேவைகள், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து அவர்களைக் காத்தது போன்றவற்றால் மத்திய வெளியுறவுத் துறையின் இரு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த நாள் நாளை(14-ம்தேதி) வருவதையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருந்த அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மட்டுமின்றி அயல்நாட்டினரும் உதவி என ட்விட்டரில் முறையிட்டால் அவர்களுக்குத் தேவையான விசா பெறுதல் போன்றவற்றைத் தாமதமின்றி சுஷ்மா செய்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த பலருக்கும் மருத்துவச் சிகிச்சைக்கா இந்தியாவுக்கு விசா கோரியபோது, மனிதநேயத்துடன் எந்தவிதமான தாமதமின்றி விசா வழங்கி அவர்களின் நன்மதிப்பையும் சுஷ்மா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in