

சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைக் கண்டித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையை நேற்று எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக ரூ.144 உயர்த்தி அறிவித்தன. கடந்த ஜனவரி மாதம் 19 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.144 உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து, சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.
இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கடந்த கால புகைப்படத்தைப் பதிவிட்டு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டபோது, அப்போது ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சாலையில் சிலிண்டரை வைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு கண்டத்தை பதிவிட்டுள்ளார். அதில் ". சமையல் சிலிண்டர் விலை மிகப்பெரிய அளவாக 150 ரூபாய் உயர்ந்துள்ளதற்காக பாஜகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். பாஜகவின் இந்த உறுப்பினர்களின் போராட்டத்தை நான் ஏற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், 'ரோல்பேக்ஹைக்' என்ற ஹேஷ்டேக்கையம் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்