Last Updated : 13 Feb, 2020 01:30 PM

 

Published : 13 Feb 2020 01:30 PM
Last Updated : 13 Feb 2020 01:30 PM

நிர்பயா வழக்கு; குற்றவாளிகளைத் தனித்தனியாகத் தூக்கிலிடக் கோரும் மத்திய அரசின் மனு நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு: குற்றவாளிகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

புதுடெல்லி

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தண்டனை நிறைவேற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம். குற்றவாளிகள் 4 பேரும், மத்திய அரசின் மனுவுக்குப் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தும், சீராய்வு மனுத் தாக்கல் செய்தும் தண்டனையைத் தள்ளிப்போடக் காரணமாக இருந்தனர். இதனால் தூக்குத் தண்டனையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதில் குற்றவாளிகளில் கடைசி நபரான பவன் குப்தா இதுவரை சீராய்வு மனுவும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் தாக்கல் செய்யாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், குற்றவாளி பவன் குப்தாவுக்கு வாதிட எந்த வழக்கறிஞரும் இல்லை என்பதை அறிந்து, அவருக்கு உதவ வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷை நியமித்தனர்.

மத்திய அரசு, டெல்லி அரசு மனுவுக்குக் குற்றவாளிகள் 4 பேரும் பதில் அளிக்க வேண்டும். இந்த மனு நாளை பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x