Published : 12 Feb 2020 12:15 PM
Last Updated : 12 Feb 2020 12:15 PM
ஆந்திராவில், தனக்குக் கரோனா வைரஸ் கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்ட நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா (54). இவர் கடந்த வாரம் சனிக்கிழமையன்று உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகத் தொற்று இருந்ததன் காரணமாக அவருக்கு அதற்கான மருந்துகளைப் பரிந்துரைத்த மருத்துவர்கள், தூசு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகமூடி அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அவரோ கரோனா தொற்று ஏற்பட்டதாலேயே மருத்துவர்கள் தன்னை முகமூடி அணியச் சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணையா தன்னை யாரும் சந்திக்காதவாறு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தனது கிராமத்தில் தன்னால் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்று எண்ணி தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் குறித்து குக்கிராமம் வரை மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவசியத்தையே இந்த சம்பவம் உணர்த்துவதாக இறந்துபோன பாலகிருஷ்ணையாவின் மகன் பாலமுரளி கூறியுள்ளார்.
"என் தந்தை இணையம், தொலைக்காட்சிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளை அறிந்துகொண்டார். அதனால், அதுபோன்ற சில அறிகுறிகள் தனக்கு இருக்கவே தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக உறுதியாக நம்பினார். நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதனை ஏற்பதாக இல்லை. எங்களை கிட்டவே அனுமதிக்கவில்லை. இரவில் படுக்கைக்குச் சென்றவர் காலையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில் கிடந்தார்" என்று பாலமுரளி கூறினார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் கடைசித் தகவலின்படி 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT