பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இருப்பதாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். ரகுராம் ராஜனை அனுப்பிவிட்டீர்கள், அரவிந்த் சுப்ரமணியத்தை அனுப்பி விட்டீர்கள், உர்ஜித் படேலையும் அனுப்பிவிட்டீர்கள். இந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய, பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய எவரும் உங்களுடன் இல்லை. எதிர்க்கட்சிகளையும் நீங்கள் (மத்திய அரசு) ஆலோசனை கேட்கமாட்டீர்கள். காங்கிரஸ் கட்சி உங்களுக்கு தீண்டத்தகாத ஒன்றாகிவிட்டது. மற்ற கட்சிகளை நீங்கள் என்ன நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. ஐசியூவில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்க உங்களிடம் வழிகள் இல்லை. சுற்றி நின்றுகொண்டு சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்று கோஷமிட்டால் ஒன்றும் நிகழப் போவதில்லை. ஐசியூவில் இருக்கும் பொருளாதாரம் மீளப் போவதில்லை. திறமையற்ற டாக்டர்களால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in