Published : 10 Feb 2020 05:19 PM
Last Updated : 10 Feb 2020 05:19 PM

இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்: காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உத்தரகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ் தற்போது இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

உத்தரகண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் மக்களவையிலும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை எழுப்பி இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இந்த புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘‘உத்தரகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற்ம தீர்ப்பளித்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியலாக்குகிறது. உத்தரகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ்.’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிப்ரவரி 16-ம் தேதிக்கு முன்னதாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x