Published : 10 Feb 2020 03:20 PM
Last Updated : 10 Feb 2020 03:20 PM

சம்பந்தமில்லாத புகார்களை நாங்கள் ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம்: ஷாஹின்பாக் போராட்ட தாய்மார்களிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி ஷாஹின்பாக்கில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் தாய்மார்களின் தாயமையையும் சமூக அமைதியையும் தாங்கள் மதிப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், ‘குற்ற உணர்வை உருவாக்கும்’, ‘சம்பந்தமில்லாத’ புகார்களை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி ஷாஹின்பாக்கில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்த அரசியல் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, ஷாஹின்பாக் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில், ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகள்’ என்றும் ‘துரோகிகள்’ என்றும் அழைப்பதாக புகார் எழுப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மிகவும் கோபத்துடன் வழக்கறிஞர்களை நோக்கி, ‘சம்பந்தா சம்பந்தமில்லாத வாதங்களையும் கோரிக்கைகளையும் இந்த நீதிமன்றம் கடுமையாகப் பார்க்கிறது, இது பதிவேடுகளிலிருந்து நீக்கப்படும் என்று கூறினார்.

12 வயது தேசிய வீரதீர விருது பெற்ற ஜென் குணவர்தன் சதவர்த்தே ஒரு கடிதம் எழுதியிருந்தார், அதில் ஷாஹின்பாக் போராட்டத்தில் தாயுடன் வந்த 4 மாத குழந்தை முகமது ஜஹான் ஜனவரி 30 காலை இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார், இந்தக் கடிதத்தை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துக் கொண்டது.

இந்தச் சம்பவம் குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உண்மையில் வலி நிறைந்தது” என்றார்.

ஆனால் ஷாஹின்பாக் தாய்மார்களுக்காக ஆஜரான ஷாருக் ஆலம், 'எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளதுதான் இதில் பரிதாபம், மற்றவர்கள் நினைப்பது போல் எங்கள் வீடுகள் இல்லை. வீடுகள் வேறும் பிளாஸ்டிக் அட்டைகளினால் ஆனவையே. எங்கள் குழந்தைகளை பள்ளியில் பயங்கரவாதிகள் என்றும் துரோகிகள் என்றும் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

நீங்கள் இந்தத் தாய்மார்களின் குரல்களை கேட்க வேண்டும், இல்லையெனில் குழந்தைகளும் தாய்மார்களும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டினால் (என்.ஆர்.சி.) பிரிக்கப்படுவார்கள். குழந்தைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்றார்.

ஆனால் உடனேயே குறுக்கிட்ட தலைமை நீதிபதி போப்டே, “நீங்களோ அல்லது யாருமோ மேலும் பிரச்சினையை உருவாக்க கோர்ட்டை நடைமேடையாகப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. பள்ளியில் யாரோ ‘பாகிஸ்தானி’ என்று கூறிவிட்டதால் அதைக் கொண்டு வர இது சரியான இடமல்ல. நாங்கள் இங்கு என்.ஆர்.சி., சிஏஏ, பள்ளிகளில் முரட்டுத்தனமான நடத்தை, பாகிஸ்தானி என்று கூறப்படுவது அல்லது பிரதமர் ஆகியவற்றை விவாதிக்க கூடவில்லை.

ஒரு குழந்தையின் மரணம் பற்றிய வழக்கில் இருக்கிறோம். தாய்மையை மதிக்கிறோம், சமூக அமைதியை மதிக்கிறோம், ஆகவே குற்ற உணர்வை உருவாக்கும் வாதங்களை மேற்கொள்ளாதீர்கள்” என்றார்.

ஷாஹின்பாக் தாய்மார்களுக்காக வாதாடிய இன்னொரு வழக்கறிஞர், குழந்தைகள் உரிமைக்கான ஐநா உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. 'குழந்தைகளுக்கு போராட உரிமை உள்ளது, அதை நிறுத்தாதீர்கள்’என்றார்.

இதற்குக் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “4 மாதக் குழந்தை அங்கு போராடச் சென்றதா? 4 மாதக் குழந்தை போராட்டம் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களா?” என்றார்.

மேலும், “நாங்கள் வாதங்களை முடக்கவில்லை, இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் முறையாக அமைக்கப்பட்ட விசாரணை நடைமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் நீதிபதி போப்டே.

இதனையடுத்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

மனுசெய்த சதவர்த்தே, ‘பிறந்த குழந்தைகளுக்கு நிறைய கவனிப்பு தேவைப்படுகிறது. தங்கள் வலியை குழந்தைகளுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. குழந்தைகளை போராட்டக்களத்துக்கு கொண்டு வருவது குழந்தைகள் உரிமைகளையும் இயற்கை நீதியையும் மீறுவதாகும்’ என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்த வழக்கு விசாரணையில்தான் இந்த காரசார விவாதம் இன்று நடைபெற்றது.

தமிழில்: இரா.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x