

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு எதிரான மனுக்களை பிப்ரவரி 10ம் தேதியே விசாரணைக்கு எடுத்து கொள்வோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் இந்த விசாரணையை முன்னரே எடுத்துக் கொண்டால் அது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும் நீதிமன்றம் இதனை விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு தெரிவிக்கும்போது, “பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம், அதை எப்படி தீர்ப்பது என்பது பற்றி பார்க்க வேண்டும்.
எனவெ மனுக்களை திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். அப்போது நாங்கள் அதை அறுதியிடும் நிலையில் இருப்போம்” என்று கூறினர்.
மனுதாரர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், டெல்லி தேர்தல் பிப்ரவை 8ம் தேதி நடைபெறுகிறதே என்று கேட்ட போது, “அதே காரணத்துக்காகத்தான் நாங்கள் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறோம், அதன் மீது நாங்கள் ஏன் தாக்கம் செலுத்த வேண்டும்?” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஏன் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது என்பதற்கான வாதங்களை மனுதாரர்கள் திங்களன்று கூறுமாறு தயார்படுத்திக் கொள்ளவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தவறவிடாதீர்!