Last Updated : 07 Feb, 2020 09:44 AM

 

Published : 07 Feb 2020 09:44 AM
Last Updated : 07 Feb 2020 09:44 AM

கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் 10 பேருக்கு அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா நேற்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கர்நாடகாவில் கடந்த ஜூனில் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து 17 பேரும் பாஜகவில் இணைந்தனர். இதில் 13 பேர் கடந்த டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டதில் 11 பேர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் கட்சி மாறிய 17 பேரும் தங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அமைச்சர் பதவி வழங்குமாறு முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் சிலர், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு நடந்தது. எடியூரப்பா முன்னிலையில் நடந்த இவ்விழாவில் பாஜக எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பைரத்தி பசவராஜ், சோமசேகர், நாராயண கவுடா, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்ற 10 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் (8), மஜத(2) ஆகிய கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு மாறியவர்கள் ஆவர். இவர்கள் கடந்த டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் உரிய துறைகள் ஒதுக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த மகேஷ் குமத்தஹள்ளி உள்ளிட்ட 3 பேரும் அமைச்சரவையில் காலியாக உள்ள 3 இடங்களை தங்களுக்கு வழங்குமாறு கோரியுள்ளனர். அவர்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எடியூரப்பா உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் 15 பேர் தங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளதால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x