Last Updated : 06 Feb, 2020 12:39 PM

 

Published : 06 Feb 2020 12:39 PM
Last Updated : 06 Feb 2020 12:39 PM

ராமர் கோயில் கட்டும் பணி ஏப்ரல் மாதம் ராம நவமி அன்று தொடங்க வாய்ப்பு: ராம ஜென்மபூமி நியாஸ் கணிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் ராமரின் பிறந்த நாளான ராம நவமி அன்று தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது.

வரும் 9-ம் தேதியோடு உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிவதால், அறக்கட்டளை அமைப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று மக்களவையில் அறிவிப்பு வெளியிட்டார். அதில், அவர் கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளபடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டங்களை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இதன்படி 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முஸ்லிம்களுக்குத் தேவையான 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திடம் வழங்கப்படும். இந்த நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்கும்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் மகந்த் கமல் நயான்தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டும் பணி வரும் ஏப்ரல் மாதம் ராமர் நவமி அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு அமைத்துள்ள அறக்கட்டளையில் ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மகந்த் நிர்தியா கோபால் தாஸ் இடம் பெறுவதற்கு வாய்ப்பிருக்காது எனத் தெரிகிறது. ஏனென்றால் அவரும், விஸ்வ இந்து அமைப்பின் தலைவர் சம்பந்த் ராயும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் முடிந்தபின் அவர்கள் இருவரும் அறக்கட்டளையில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் செயல் தலைவர் அலோக்குமார் கூறுகையில், "ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்க வேண்டும். மார்ச் 25-ம் தேதி முதல் முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் உள்ள இந்துக்கள் கையில் ராமர் புகைப்படத்தை ஏந்தி மிகப்பெரிய ஊர்வலத்தைத் தொடங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் மூல மனுதாரரான ஹசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், " உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்திடம் வழங்க இருக்கும் 5 ஏக்கர் நிலத்தில் தர்மசலா தங்கம் விடுதியை உருவாக்க வேண்டும். அயோத்திக்குத் தரிசனத்துக்காக வரும் இந்துக்கள் இலவசமாகத் தங்கிச் செல்லும் வசதியை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து: க‌ர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ராமர்கோயில் அறக்கட்டளை அறிவிப்பு; டெல்லி தேர்தலுக்கு தொடர்பில்லை: மத்திய அரசு விளக்கம்

5 ஆண்டுகளில் 320 ஊழல் அதிகாரிகள் நீக்கம்; 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x