Last Updated : 04 Feb, 2020 10:05 PM

 

Published : 04 Feb 2020 10:05 PM
Last Updated : 04 Feb 2020 10:05 PM

தமிழக சபாநாயகர் 3 ஆண்டுகள் தாமதித்தது தேவையில்லாதது: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் 3 ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது தேவையில்லாதது என்று திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அதேசமயம், தகுதி நீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறை செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுத் தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, திமுக கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சக்ரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ந் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்குப் பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

கபில் சிபல் வாதிடுகையில், " எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டு அவர்களைத் தகுதி நீக்க 2017-ம் ஆண்டு மனு அளித்தும் தமிழக சபாநாயகர் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. சட்டப்பேரவையின் காலமும் அடுத்த ஆண்டில் முடியப் போகிறது. ஆனால், தகுதி நீக்க மனு எதிர்க்கட்சி எம்எல்ஏ யாருக்கேனும் அளிக்கப்பட்டு இருந்தால் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பார்.

ஆனால், இந்த மனு ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதால் சபாநாயகர் நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை" எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, "3 ஆண்டுகளாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தேவையில்லாத ஒன்றுதான். கபில் சிபல் கூறுவது சரியானதாக இருந்தால், எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் எனக் கூறுங்கள். நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" எனக் கேட்டனர்.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், " இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு இதை அதிகமான நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரைத்து, சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் இருக்கிறதா எனப் பரிசீலிக்கக் கோரியது" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு குறிப்பிடுகையில், "கடந்த ஜனவரி 21-ம் தேதி நீதிபதி ஆர்எப் நாரிமன், மணிப்பூர் சபாநாயகர் தொடர்பான வழக்கில் மக்களவை, சட்டப்பேரவை சபாநாயகர்கள் தகுதி நீக்க மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. மணிப்பூர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கவனித்து இருப்பீர்கள்தான். சபாநாயகர் என்பவர் தகுதி நீக்க மனுவை நீண்ட காலம் கிடப்பில் போட்டுவைக்கக் கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்.

தமிழக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கப்போகிறாரா என்று கூறுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்றால் எப்போது எடுப்பார், எவ்வாறு எடுப்பார் என்று கூறுங்கள். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். வழக்கு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x