Last Updated : 26 Aug, 2015 03:58 PM

 

Published : 26 Aug 2015 03:58 PM
Last Updated : 26 Aug 2015 03:58 PM

உடல் உறுப்புகள் தானம் செய்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சக ஒருங்கிணைப்பு குழு

உடல் உறுப்புகளின் தானம் செய்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி மத்திய அமைச்சக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் அமைக்கப்பட இருக்கும் இந்த குழுவிற்கு அவரது துறையின் செயலாளர் தலைவராக இருப்பார்.

டெல்லியில் உடல் உறுப்பு தானம் மீதான ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சக அதிகாரிகள், உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை தொழில் நிபுணர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நம் நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டியதன் அவசியம் அதிகரித்துள்ளது குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. இதற்கான தேவை இருக்கும் அளவிற்கும் குறைவான எண்ணிக்கையில் உடல் உறுப்புகளை தானம் செய்ய பொதுமக்கள் முன்வருவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையின் சிறுநீரகம் மாற்று மற்றும் சிறுநீரகயியல் மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர்.அனந்தகுமார் கூறியதாவது: "நம் நாட்டின் தேவைக்காக வருடத்திற்கு 20.000-க்கும் மேற்பட்ட உறுப்புகள் தேவைப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு சிறுநீரகம் செயல் இழக்கும் சுமார் இரண்டு லட்சம் நோயாளிகளில் 7,500 பேரால் மட்டுமே அதன் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. அதேபோல், மாற்று இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளும் நீண்டகாத்திருப்பில் இருக்க வேண்டியதாக உள்ளது.

இவர்களுக்கு, உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து இருதய மாற்று செய்வது சாத்தியமல்ல என்பதே இதன் காரணம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இந்தியாவில் சிறப்பாக செய்யப்படுகிறது. எனினும், அதன் செயல் இழந்தவர்களில் 40 முதல் 50 சதவிகித நோயாளிகளுக்கு கல்லீரல் கிடைக்காமல் இறக்க நேரிடுகிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் பலனால் காத்திருப்பு பட்டியலில் இருக்க நேரிட்டாலும், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களால் அதுபோல் இருக்க வாய்ப்பில்லை.

உயிருடன் இருப்பவர்களே உடல் உறுப்புகள் தானத்தில் இன்னும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். இதனால், மிகவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உடல் உறுப்புகள் இழந்தவர்களை காக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மூளைச்சாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் சட்டரீதியாக இறந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வருவது அவசியம் ஆகும்.

இதற்கு அவர்களுடைய உடல் உறுப்புகள் வெண்டிலேட்டர் உதவியால் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இது போன்றவர்கள், உடல் உறுப்புகள் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ பெரும் வாய்ப்பாக அமைகிறது. இதற்காக, மாநில அரசுகள் விரும்பினால் உடல் உறுப்புகள் தானம் அளிப்பது குறித்து கட்டாயமாக்கி முக்கியமான சட்டமாக்குவது குறித்தும் யோசிக்கலாம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x