Last Updated : 03 Feb, 2020 01:10 PM

 

Published : 03 Feb 2020 01:10 PM
Last Updated : 03 Feb 2020 01:10 PM

உங்கள் தோட்டா எங்கே? சுடுவதை நிறுத்துங்கள்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரைப் பேசவிடாமல் காங். எம்.பிக்கள் மக்களவையில் எதிர்ப்பு

மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பேச முயன்றபோது அவரைப் பேசவிடாமல் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துக் கோஷமிட்டனர்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதைக் கண்டித்த தேர்தல் ஆணையம், அனுராக் தாக்கூர் 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தடை விதித்தது.

மக்களவை இன்று காலை தொடங்கியதும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து பேச முயன்றார். அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்து, முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

காங்கிரஸ்எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய காட்சி

உடனே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் சபாநாயகர் மேடை முன் வந்து 'அரசியலமைப்பைப் பாதுகாப்போம்', 'இந்தியாவைப் பாதுகாப்போம்', 'பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்', 'வன்முறைப் பேச்சைக் கைவிடுங்கள்' , 'சிஏஏவைத் திரும்பப் பெறுங்கள்' என்று கூச்சலிட்டனர்.

அனைத்து எம்.பி.க்களையும் அவர்கள் இருக்கையில் அமருமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் ஒருகட்சியின் தலைவர்கள். அவையைக் குலைக்குமாறு பேசக்கூடாது. முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். தயவுசெய்து இருக்கையில் அமருங்கள். கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் பேச அனுமதி அளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுந்து பதில் அளிக்க முற்பட்டார்.

அப்போது, அவையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எழுந்து கோஷமிட்டு இடையூறு செய்தார்கள். மேலும், அமைச்சர் அனுராக் தாக்கூரை நோக்கி, காங்கிரஸ் எம்.பி.க்கள், "உங்கள் துப்பாக்கிக் குண்டு எங்கே?துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துங்கள்" என்று கோஷமிட்டனர்.

மேலும், அவையில் எப்போதெல்லாம் கேள்விக்குப் பதில் அளிக்க அனுராக் தாக்கூர் எழுந்தபோதெல்லாம், அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டனர். இதனால், அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x