

நடப்பு நிதியாண்டில் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கலில் எளிமையான நடைமுறை அமலாகும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அவரின் 2-வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டைப் போலவே சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஜிஎஸ்டி பற்றிக் குறிப்பிடுகையில், "வரும் நிதியாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கலில் எளிமையான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். ஜிஎஸ்டி மூலம் ரூ.1 லட்சம் கோடி நுகர்வோருக்கு சேமித்துக் கொடுத்துள்ளது. அதிகாரிகள் கெடுபிடிகளை நீக்கியுள்ளது, போக்குவரத்துத் துறைக்கு உதவியுள்ளது.
உலக அளவில் இந்தியா தற்போது 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. நாட்டின் கடன் 2014-ம் ஆண்டில் ஜிடிபியில் 52.2 சதவீதம் இருந்த நிலையில் தற்போது அது 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சராசரியாக பணவீக்கம் 4.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 6.11கோடி விவசாயிகளுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.