Published : 01 Feb 2020 10:59 AM
Last Updated : 01 Feb 2020 10:59 AM
மோடி எங்களுடைய பிரதமர். அவரை அவதூறாகப் பேசுவதையும், உள்நாட்டுத் தேர்தலில் தலையிடுவதையும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே உரசல் போக்கு இருந்தாலும், டெல்லி தேர்தலில் இருவரும் கடுமையாக விமர்சித்த போதிலும், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் மோடியை விமர்சித்தவுடன், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கேஜ்ரிவால் பேசியுள்ளது தேர்தல் நேரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 11-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி குறித்தும், டெல்லி தேர்தல் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும். கடும் நெருக்கடியால் டெல்லி தேர்தலிலும் பிரதமர் மோடியின் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடியின் அற்பத்தனமான பேச்சும், மிரட்டல் போக்கும் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மோடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவை இழந்துவிட்டார்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் " நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர். எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லி தேர்தல் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தீவிரவாதத்துக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழும் பாகிஸ்தான் தலையிடுவதை நாங்கள் பொறுத்திருக்கமாட்டோம். எப்படிப்பட்ட முயற்சிகளைப் பாகிஸ்தான் செய்தாலும், அவர்களால் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT